Nov 28, 2013

திருத்தணியில் தடையை மீறி பான்பராக், குட்கா விற்பனை

திருத்தணி, நவ. 28:
திருத்தணி பகுதி கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கேரி பேக் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பான்பராக், குட்கா விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுகளை மீறி திருத்தணி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
திருத்தணி மபொசி சாலை, அரக்கோணம் சாலை, கந்தசாமி தெரு, அக்கையா நாயுடு சாலை, பைபாஸ் சாலை, காந்தி ரோடு, கீழ் பஜார், சித்தூர் ரோடு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தாராளமாக பான்பராக், குட்கா விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுபோல் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளும் விற்கின்றனர்.
இதை சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment