Nov 20, 2013

மேட்டூரில் காலாவதி கோழி கறி விற்பனை ஹோட்டலில் ஆய்வு செய்த அதிகாரி "ஷாக்'

மேட்டூர்: மேட்டூரில், அசைவ ஹோட்டல் ஒன்றில், காலாவதி கோழிக் கறியை ப்ரை செய்வதற்காக, மசாலா தடவி வைத்திருந்தது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேட்டூர் சதுரங்காடியில் உயர்தர சைவ, அசைவ ஹோட்டல் உள்ளது. இங்கு தயாராகும் உணவு தரமாக இல்லை என, உணவு பாதுகாப்பு துறைக்கு ஏராளமான புகார் சென்றது.
அதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் அதிகாரிகள் நேற்று மேட்டூர் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சதுரங்காடியில் உள்ள, "வீமாஸ்' அசைவ ஹோட்டலில் முதல் நாள் வெட்டிய காலாவதி கோழி இறைச்சியை மறுநாள் விற்பனை செய்வதற்காக, மசாலா தடவி தயார் நிலையில் வைத்திருந்தது ஆய்வு செய்த அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இனி இதுபோல காலாவதி இறைச்சியை கொண்டு உணவு தயாரிக்க கூடாது எனல எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மூன்று கிலோ காலாவதி கோழி இறைச்சியையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுபோல அருகிலுள்ள சரவண பவன், ராமவிலாஸ், கிருஷ்ணபவன் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், ஹோட்டல் சமையல் அறை மோசமாகவும், சுகாதார கேடாகவும் இருப்பதை கண்டனர். மேலும், மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் மெயின்ரோட்டோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, 30,000 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை பாக்கு பாக்கெட்டுகள் மற்றும், 10 கிலோ கலப்பட தேயிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.டாக்டர் அனுராதா கூறியதாவது:மேட்டூர் சதுரங்காடி பகுதி அசைவ ஹோட்டலில் காலாவதி இறைச்சி சமையலுக்கு வைத்திருப்பது தெரியவந்தது.மீண்டும் காலாவதி இறைச்சி விற்றால் ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதர ஹோட்டல்களில் சமையல் கூடம், உணவு பொருட்கள் சுகாதாரமின்றியும், மோசமாகவும் உள்ளது. ஒரு மாதத்துக்குள் மாற்று ஏற்பாடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் மாற்றம் செய்யாவிடில் நோட்டீஸ் அனுப்பி சம்பந்த ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment