Nov 15, 2013

அதிகாரிகளின் கெடுபிடி நடவடிக்கையால் வியாபாரிகள் அதிருப்தி சேலத்தில் 15 நாட்களாக முடங்கிய வெல்ல வியாபாரம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் எழுப்பப்பட்ட கலப்பட பிரச்னையால், சேலம் வெல்ல வியாபாரம், 15 நாட்களாக முடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில், ஓமலூர், கருப்பூர், கரும்பாலை, சாத்தியம்பாடி, தொட்டியாபுரம், சின்னேரிக்காடு, சர்க்கரை செட்டிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வெல்லம் உற்பத்தி பிரதான தொழிலாக விளங்கிவருகிறது. 150க்கும் மேற்பட்ட ஆலைகளில் காய்ச்சப்படும் வெல்லம், சேலம் செவ்வாய்பேட்டையில், விவசாயிகள் சங்கத்தில் நடக்கும் தினசரி வெல்ல ஏலத்துக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கு வியாபாரிகள் மூலம் ஏலத்துக்கு எடுக்கப்படும் வெல்லம், பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய வெல்ல சந்தையாக, சேலம் விளங்கி வந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு, முன் வெல்லத்தில் அதிக அளவில் கெமிக்கல் கலப்பதாக, எழுந்த புகாரின் அடிப்படையில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, ஆலைகளில் ஆய்வு நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், கெமிக்கல் கலந்தால், பறிமுதல் செய்யப்படும் என, எச்சரித்தார்.
இதேபோன்று, கலப்பட வெல்லத்தை வியாபாரிகள் வாங்கி, வியாபாரம் செய்தாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார். இதனால், கடந்த அக்டோபர், 29ம் தேதிக்கு பின், தினசரி நடக்க வேண்டிய வெல்ல விற்பனை ஏலம், இதுவரை நடத்தப்படவில்லை.
விவசாயிகள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் இடையே நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையிலும், இழுபறியே நீடித்து வந்தது. தற்போது, வெல்லம் உற்பத்தி செய்யும் வியபாரிகள் அவற்றை, வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால், சேலம் வெல்லம் வியாபாரம் முடங்கியுள்ளது.
இதுகுறித்து வெல்ல வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
வெல்லத்துக்கு நிறம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சோடியம் ஹைட்ரோ சல்பைடு எனும் உப்பு கலந்து, வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, 70 பி.பி.எம்., அளவு கலந்துகொள்ள அனுமதியும் உள்ளது. தமிழகம் முழுவதும் இவை கலந்தே, வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
தற்போது, சேலத்தில் கெடுபிடி அதிகரித்ததால், வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகள், ஈரோடு, சித்தோடு, பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், 15 நாட்களுக்கும் மேல், சேலம் செவ்வாய்பேட்டையில் வெல்லம் வரத்து இன்றி, முடங்கியுள்ளது. தற்போது, விவசாயிகள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் கலந்து பேசி, அளவுக்கதிகமாக கெமிக்கல், சர்க்கரை உள்ளிட்டவை கலக்காமல் தயாரிப்பது என, முடிவுக்கு வந்தாலும், அதிகாரிகள் தரப்பில் தரப்படும் நெருக்கடி சேலம் வெல்ல சந்தையை பாதிக்கிறது.
மற்ற மாவட்டங்களிலும், இதே நிலை நீடித்தால், சேலம் வெல்ல சந்தைக்கு பாதிப்பு ஏற்படாது. மற்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்படும் வெல்லத்தை, இங்கு பறிமுதல் செய்யும் பட்சத்தில், விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
இனியும் இதே நிலை நீடித்தால், வெல்லம், கரும்புகளுடன், அதிகாரிகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment