Oct 21, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி தீபாவளி வசூல்வேட்டை, லஞ்சம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் தெரிவிக்கலாம்


நாகை, அக்.21:
தீபாவளியையொட்டி உணவு பாதுகாப்புதுறை பெயரைசொல்லி வசூல் வேட்டை யில் ஈடுபட்டால் லஞ்சஒழிப்பு துறைக்கு வியாபாரிகள் புகார் தெரிவிக்கலாம்.
நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி திருவிழாவை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களை தயாரிப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்குவதால், உணவு விற்பனை நிலையங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் தரமான, தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பார்த்து வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்வோர், உணவு பாது காப்பு மற்றும் தரச்சட்டம் 2006ல் அனுமதிக்கப்படாத நிறமிகளை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப் பட்ட, நிறமி களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்த கூடாது.
தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான சூழ்நிலையில்,நோய்த்தொற்று இல்லாத ஊழியர்களை கொண்டு உணவுப்பொருட்களை தயாரிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சுகாதாரமான இடத்தில் ஈ உள்ளிட்டவை அணுகாதவண்ணம் பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரையே உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகை நகராட்சி மற்றும் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட சில உணவு விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை தவறாக பயன்படுத்தியும், உணவு பாதுகாப்புத்துறை என்று சொல்லிக்கொண்டும், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பேன் என்று கூறியும் உணவு விற்பனையாளர்களிடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம், அன்பளிப்பு, லஞ்சம் கேட்பதாக தகவல்கள் வந்துள்ளன. உணவு பாதுகாப்பு அலுவலர் போல் செயல்படுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் பெயரை பயன்படுத்தி யாராவது வசூல் வேட்டையில் ஈடுபட்டால் உடனடியாக நாகை கலெக்டருக்கோ, மாவட்ட கலெக்டரின் முகாம் அருகில் காடம்பாடியில் இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை 04365 249090 என்ற தொலைபேசி எண்ணுக்கோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment