Oct 28, 2013

ஜவ்வரிசியில் ஆபத்தான கலப்படம் 54 சேகோ ஆலைகளில் ஆய்வு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி



சேலம், அக்.25:
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் இயங்கும் சில சேகோ ஆலைகளில் ஜவ்வரிசிக்கு வெண்மை நிறமேற்ற ஒயிட்னர் மற்றும் சல்பியூரிக் அமிலம் பயன்படுத்துவது உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி அதிகம். இதை பயன்படுத்தி ஜவ்வரிசி தயாரிப்பில் சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் பகுதியில் சாபு என்று தனி யார் ஜவ்வரிசி (சேகோ) உற் பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், வெண்மை நிறம் வருவதற்காக ஜவ்வரிசியில் ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற ரசாயணம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை சூரமங்கலம் பகுதி அதிகாரி திருமூர்த்திக்கு புகார் சென்றது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட அலுவலர் அனு ராதா, சூரமங்கலம் பகுதி அதிகாரி திருமூர்த்தி தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் 20ம் தேதி குடோனில் இருந்த ஜவ்வரிசியை ஆய்வு செய்து உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனையில் ஜவ்வரிசியில் ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற வேதி பொருள் கலந்து இருப்பது தெரிய வந்தது. ஆப்டிக்கல் ஒயிட்னர் வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. ஜவ்வரிசியின் பழுப்பு நிறத்தை மாற்றுவதற்கு ஒயிட் னரை பயன்படுத்தி வருவது தொடர்பாக உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளில் இது போன்ற கலப்படம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேகோ ஆலையில் சோதனையிட்டனர். இந்த சோதனை யில் பல லட்சம் மதிப்பிலான ஆப்டிக்கல் ஒயிட்னர், சல்பியூரிக் அமிலம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை சேலம் மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் அனுராதா கூறியதாவது:
சேலம் அடுத்த பனமரத்துப்பட்டியில் தனியார் சேகோ ஆலையில், ஜவ்வரிசி வெண்மை நிறமாக மாறுவதற்கு ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற கெமிக்கல் பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர் அனுமதி வழங்கியபின் ஆலை உரிமையாளர் மீது விரைவில் வழக்கு தொடரப்படும்.
தொடர்ந்து தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 54 சேகோ ஆலைகளில் ஆய்வு செய்தோம். அப்போது அந்த ஆலைகளில் ஜவ்வரிசியில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 25 கிலோ சோடி யம் ஹைட்ரோ குளோரைடு கெமிக்கல், 50 லிட்டர் கொள் ளளவு கொண்ட சல்பியூரிக் அமிலம் 3 கேன், ஆப்டிக்கல் ஒயிட்னர் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தோம். மேலும் சேகோ ஆலை அதிபர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை மீறி ஜவ்வரிசியில் கெமிக்கல் கலந்து இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளோம்.இவ்வாறு டாக்டர் அனுராதா கூறினார்.
புற்றுநோய் ஏற்படும்
கிழக்கு மாவில் ஜவ்வரிசி, அப்பளம் உள்ளிட்டவைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசியில் ஆப்டிக்கல் ஒயிட்னர், சல்பியூரிக் அமிலம் உள்ளிட்டவைகளை சேர்க்கும்போது, அதை தொடர்ந்து சாப்பிடும் மக்களுக்கு முதலில் வயிற்று எரிச்சல், புண் ஏற்படும். அதன்பின் நாளடைவில் புற்றுநோய் தாக்கி உயிரிழப்பு ஏற்படும்.
நிறத்தை மாற்ற அமிலம் கலப்பு
மரவள்ளி கிழங்கை அரைத்து ஜவ்வரியாக தயாரிக்கும் போது, அவை பழுப்பு நிறத்தில் இருக்கும். கிழங்கில் இருக்கும் பழுப்பு நிறத்தை எடுக்க, கிழங்கு அரைக்கும் போதே சோடியம் ஹைட்ரோ குளோரைடு கரைசல் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கும்போது கிழங்கு மாவு வெண்மை நிறத்தில் இருக்கும். மேலும் வெண்மை நிறமாகவும், பளபளப்பாக இருக்க சல்பியூரிக் அமிலம், பாஸ்பரிக் அமிலம், ஆப்டிக்கல் ஒயிட்னர் ஏதாவது ஒன்று கலக்கப்படுகிறது. அப்போது ஜவ்வரிசி பார்க்க பளபளப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment