Sep 7, 2013

சேலம் அருகே கலப்பட டீத்தூள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

சேலம், செப்.7:
சேலம் அருகே கலப்பட டீத்தூள் விற்பனை செய்தவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சேலம் அடுத்த ஓமலூரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக டீத்தூள் வியாபாரம் செய்து வந்தனர். இந்த டீத்தூளில் கலப்படம் உள்ளது என பலர் சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இப்புகாரின்பேரில் சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் செல்வம் வீட்டில் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 250 கிலோவுக்கு மேல் இருந்த கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை அதிகாரிகள் சென்னையில் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வில் செல்வம் விற்பனை செய்தது கலப்பட டீத்தூள் என்பது தெரியவந்தது.
இதேபோல் சென்னையில் கலப்பட டீத்தூள் தயாரித்த கம்பெனியிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல ஆயிரம் கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்து, கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினர். அதுவும் கலப்பட டீத்தூள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர், கலப்பட டீத்தூள் தயாரித்த சென்னை சேர்ந்த கம்பெனி உரிமையாளர் மீதும், அதை விற்பனை செய்த செல்வம் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இன்னும் ஒரு சில நாளில் இவர்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment