Sep 6, 2013

மசாலா தோசையில் கரப்பான் பூச்சி திருவனந்தபுரத்தில் ஓட்டலுக்கு சீல்

திருவனந்தபுரம், செப். 6:
திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தவருக்கு வழங்கப்பட்ட மசாலா தோசையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். அதோடு அந்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திருவனந்தபுரத்திலுள்ள ஒரு அசைவ ஓட்டலில், கடந்த ஆண்டு சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீரென இறந்தார். இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் நடத்திய பரிசோதனையில், அந்த மாணவருக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு, கேரளா முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் ஓட்டல்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த சோதனையில் கேரளாவில் பெரும்பாலான ஓட்டல்கள் சுகாதரமற்ற முறையில் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
நேற்று முன்தினம், திருவனந்தபுரம் வழுதக்காட்டிலுள்ள ஒரு சைவ ஓட்டலுக்கு விமானப்படை அதிகாரியான ராஜேந்திரன் என்பவர் சாப்பிட சென்றார். அவர் மசாலா தோசைக்கு ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் மசாலா தோசை வந்தது. ஆவலுடன் அதை ராஜேந்திரன் சாப்பிட முயன்றபோது, மசாலாவுக்குள் ஒரு இறந்த கரப்பான் பூச்சி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் விவரத்தை கூறினார். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜேந்திரன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த ஓட்டலில் பரிசோதனை நடத்தினர். இதில் அந்த ஓட்டலில் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சமையலறை அருகிலேயே கழிப்பறையும் இருந்தது. இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு ரூ.10,000 ஆயிரம் விதித்த அதிகாரிகள், ஓட்டலையும் பூட்டி சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment