Aug 5, 2013

கலப்பட டீத்தூள் புற்றுநோயை உண்டாக்கும் - உணவு பாதுகாப்பு விழிப்புணர்வில் தகவல்

சேலம், ஆக.5:
கலப்பட டீத்தூள் புற்றுநோயை உண்டாக்கும் என்று உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலர் கூறினார்.
சேலம் விஜயராகவாச்சாரியார் நினைவு நூலக வாசகர் மன்றம் சார்பில் உணவும், பாதுகாப்பும் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கலந்து கொண்டுபேசியதாவது:
அனைத்து உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பதிவு சான்று, உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். தரமான, சுத்தமான, பாதுகாப்பான உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். தரக்குறைவான மற்றும் கலப்பட உணவு பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அளவுக்கு அதிகமான வண்ணங்கள் மற்றும் அதிகமான பதனப்பொருட்கள் உணவுப்பொருட்களில் கலப்பது சட்டப்படி குற்றமாகும்.
குழந்தைகள், சிறுவர்கள் நைட்ரஜன் கேஸ் அடைக்கப்பட்ட சிப்ஸ் உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் நரம்பு மண்டலம் பாதிக்கும். கலப்பட டீத்தூளில் அதிகமான சாயம் சேர்க்கப்படுகிறது. இந்த டீத்தூளால் மனிதனுக்கு புற்றுநோய் உண்டாகும். அதே போல, சில்லி சிக்கன் கடைகளில் அளவுக்கு அதிகமாக அனுமதிக்கப்படாத வண்ணங்கள் கலந்திருப்பது, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களில் தயாரிப்பாளர் முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மற்றும் பேக் செய்த தேதி, பேட்ஜ், லாட் நம்பர், காலாவதி ஆகும் தேதி ஆகியவை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளும் முறைகள் குறித்து அவர் விளக்கினார்.

No comments:

Post a Comment