Aug 31, 2013

லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல்

சேலம்: சேலம் மாவட்ட, ஏ.எஸ்.பி., வீட்டுக்கு, புழுக்களுடன் கூடிய தண்ணீரை சப்ளை செய்த, மினரல் வாட்டர் கம்பெனிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம், உதவி எஸ்.பி.,யாக இருப்பவர், சரோஜ் குமார் தாக்கூர். இவருடைய வீட்டுக்கு, அக்வா டெக் என்ற பெயரில், மினரல் வாட்டர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம், அவர் வீட்டுக்கு சப்ளை செய்யப்பட்ட, மினரல் வாட்டர் கேனில், புழு மிதந்ததை பார்த்த, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, அனுராதாவிற்கு, ஏ.எஸ்.பி., தகவல் கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் மாலை, நெத்திமேடு இட்டோரி ரோட்டில், செயல்பட்டு வந்த, "ஸ்ரீ அக்வா டெக்' மினரல் வாட்டர் நிறுவனத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், முன்னணி நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தியும், எந்த வித லைசென்ஸ் இல்லாமல், கம்பெனி செயல்பட்டு வந்ததும், தெரியவந்தது. இதை தொடர்ந்து, அங்கு தயாரிக்கபட்ட தண்ணீரை, சென்னை கிண்டியில் உள்ள, பரிசோதனை கூடத்திற்கு, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து, நேற்று காலை, அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த, மினரல் வாட்டர் கம்பெனிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். கம்பெனியின் உரிமையாளர், தீபக் என்பவரை, போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி, அனுராதா கூறியதாவது:
கடந்த, நான்கு மாதத்துக்கு முன்னர், நெத்திமேட்டை சேர்ந்த தீபக் என்பவர், மினரல் வாட்டர் கம்பெனிக்கு, அனுமதி கேட்டுள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாமல், அனுமதி கொடுக்க முடியாது என்று, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதன் பிறகு, நெத்திமேட்டில், எந்த அனுமதியும் இன்றி, போலியான பெயரில், ஐ.எஸ்.ஓ முத்திரையுடன், கம்பெனியை நடத்தி வந்துள்ளார்.
ஏ.எஸ்.பி,.,சரோஜ் குமார் தாக்கூர், தந்த தகவல் அடிப்படையில், கம்பெனியில், சோதனை செய்து பார்த்த போது, சுகாதாரமற்ற முறையில், இயங்கி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, இன்று (நேற்று) கம்பெனிக்கு சீல் வைத்துள்ளோம். 15 நாளில், கிண்டியில், இருந்து அறிக்கை கிடைத்த பிறகு, உணவு பாதுகாப்பு சட்டப்படி, தீபக் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment