Aug 3, 2013

சேலத்தில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் கேன்கள் பறிமுதல்


சேலத்தில் தரமற்ற 200 குடிநீர் கேன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், ஆக.3-

சேலத்தில் தரமற்ற 200 குடிநீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குடிநீர் கேன்கள்
சேலம் மாநகரில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்நிறத்தில் கலங்கலாக வந்தது. இதன் காரணமாக பெரும்பாலானோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களை வாங்கி பயன்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் சுத்திகரிக்கப்படாத தரமற்ற நீரை கேன்களில் அடைத்து வீடுகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் பாலு, ஜெகநாதன், இளங்கோ மற்றும் அதிகாரிகள் நேற்று சேலம் அழகாபுரம் அருகே உள்ள மிட்டாபுதூர் பகுதியில் கண்காணித்து கொண்டிருந்தனர்.

200 குடிநீர் கேன்கள் பறிமுதல்

அப்போது அந்த வழியாக மினரல் தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த 4 மினிடோர் ஆட்டோக்களை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கேன்களில் குடிநீர் அடைத்த தேதி மற்றும் குடிநீர் கேன்களின் மூடியில் பல்வேறு கம்பெனிகளின் லேபிள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் எங்கு குடிநீர் நிரப்பியதற்கான பில் ரசீது எதுவும் இல்லை.

அதிகாரிகள் விசாரணையில் இவை அனைத்தும் தரமற்ற சுத்திகரிக்கப்படாத குடிநீர் என்பது தெரியவந்தது. ஒவ்வொரு மினி டோர் ஆட்டோவிலும் 20 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 கேன்கள் இருந்தது.

இதையடுத்து, 4 மினி டோர் ஆட்டோவில் இருந்து தரமற்ற 200 குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த கேன்களில் உள்ள குடிநீரை அதிகாரிகள் ரோட்டில் கீழே கொட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


சேலத்தில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் கேன்கள் பறிமுதல்


சேலத்தில் கடைகளில் விற்க முயன்ற சுத்திகரிக்கப்படாத 200 குடிநீர் கேன்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சேலம் மிட்டாபுதூர் அருகே உள்ள கடையில் போலி லேபிள் ஒட்டப்பட்டு, 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்படாத குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவிற்கு புகார் வந்தது.

இதையடுத்து, நியமன அலுவலர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மிட்டாபுதூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்படாத குடிநீர் கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், கடைக்காரர்களிடம் குடிநீர் கேன்களுக்கு மேல் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மினிடோர் ஆட்டோக்களில் சிலர் தங்களது கடைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ததாகத் தெரிவித்தனர்.

அப்போது, அந்த வழியாகத் குடிநீர் கேன்கள் ஏற்றிக் கொண்டு வந்த 4 மினி டோர் ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 4 மினி டோர் ஆட்டோக்களில் சுத்திகரிக்கப்படாத 200 குடிநீர் கேன்கள் இருந்தது தெரிய வந்தது. அந்தக் கேன்களில் தயாரிப்பு நிறுவனம் பெயர், தேதி அச்சிடப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 200 கேன்களில் இருந்த குடிநீர் கீழே கொட்டப்பட்டது. விசாரணையில், காலிக் கேன்களைக் கொடுத்து, சில நிறுவனங்களில் இருந்து குடிநீர் பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, குடிநீர் கேன்களின் மேல் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், தேதி அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். நீல நிற கேன்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்பி விற்பனை செய்ய வேண்டும்.

இந்த விதிமுறையை மீறி, சுகாதாரமற்ற முறையில் சுத்திகரிக்கப்படாதத் குடிநீரை கேன்களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை எச்சரித்தனர்.

மேலும், சுத்திகரிக்கப்படாதத் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகம் 0427-2450332 மற்றும் நியமன அலுவலர் டாக்டர் அனுராதா 9443520332 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment