Aug 1, 2013

உணவின் மாதிரி மட்டுமே ஆய்வுக்கு எடுக்கப்படும்


விடுதியில் வழங்கப்படும் உணவினால், மாணவர்களுக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால், அதை ஆய்வு செய்யவே, இரண்டு மணி நேரம், உணவின் மாதிரி வைத்திருக்க, உத்தரவிடப்பட்டுள்ளது' என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் நலத்துறை விடுதிகளில் பணிபுரியும், சமையலர்களுக்கு, அத்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவில், வாராந்திர உணவு முறைப் பட்டியலின் படி, தரமான உணவு வழங்கப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும். சமையலறையை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், எந்த கலப்படமுமின்றி, தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கடமை உணர்வோடு, வார்டன்கள் தரமான உணவுகளை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வேளையும், சமைக்கும் உணவின் மாதிரியை சமைத்து முடித்த இரண்டு மணி நேரம் வரை, ஆய்வுக்காக விடுதியில் வைக்க வேண்டும். சமைத்த உணவுகளை, வார்டன்கள் ருசி பார்த்த பின்னரே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு வெளியானவுடன், சமைத்த உணவை ஆய்வு செய்வதற்கு, இரண்டு மணி தேவையில்லை எனவும், ஆய்வு முடிவதற்குள், சமைத்த உணவு ஆறி அவலாய் போய்விடும் எனவும், விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து, பிற்படுத்தப்பட்ட நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விடுதியில் வழங்கப்படும் உணவால், மாணவர்களுக்கு ஏதாவது உபாதை ஏற்படும் பட்சத்தில், அதை ஆய்வு செய்யவே, இரண்டு மணி நேரம், உணவின் மாதிரி வைத்திருக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற படி, சமைத்த அனைத்து உணவுகளும், உடனடியாக பரிமாறப்படும்' என்றார்.

No comments:

Post a Comment