Jul 17, 2013

150 கிலோ புகையிலையுடன்குட்கா, பான்மசாலா பறிமுதல்

சேலம்: சேலம், பால் மார்க்கெட் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, குட்கா விற்பனை செய்ததை கண்டறிந்த, உணவு பாதுகாப்பு அதிகாரி, அவற்றை பறிமுதல் செய்தார்.தமிழகத்தில், புகையிலை, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவற்றுக்கு, அரசு தடைவிதித்துள்ளது. மறைமுகமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் போதை வஸ்து விற்பனையை தைரியமாக செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா தலைமையிலான குழு, ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறது.நேற்று, சேலம் பால்மார்க்கெட், லீ பஜார் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில், புகையிலை மொத்தமாக விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடையில் இருந்து, 150 கிலோ புகையிலையையும், 6,000 ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலாவையும் பறிமுதல் செய்தனர்.அப்போது, அங்கிருந்த வியாபாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரியை முற்றுகையிட்டு, மற்ற மாவட்டங்களில், இதுபோன்று ஆய்வு செய்வதில்லை. சேலத்தில் மட்டும் ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர். "எதை வேண்டுமானாலும், உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள்' என கூறிவிட்டு, அதிகாரி அனுராதா, பறிமுதல் செய்த பொருட்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
உணவு பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:ஏற்கனவே ஒரு முறை எச்சரிக்கை விடுத்து வந்தேன். இருப்பினும், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வந்தனர். அதனால், அவற்றை பறிமுதல் செய்தோம். வியாபாரிகள், விவசாயிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். எங்களுடைய பணியை செய்கிறோம், என கூறிவிட்டு நாங்கள் புறப்பட்டு வந்தோம். எனக்கு யாரும் மிரட்டல் விடுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment