Jun 25, 2013

தடையை மீறி பான், குட்கா விற்றால் நடவடிக்கை : அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: தடையை மீறி பான், குட்கா பொருட்கள் விற்பனை செய்வோரிடம், பறிமுதல் செய்யும் பணி துவங்கியுள்ள நிலையில், நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து, சென்னையில் இன்று, உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

புகையிலையால் ஏற்படும், பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்க, தமிழகத்தில், குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும், புகையிலைப் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிடங்குகளில் உள்ள, இருப்புகளை காலி செய்ய கொடுக்கப்பட்ட, ஒரு மாத அவகாசம், இம்மாதம் 22ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனால், தடையை மீறி விற்பது, பதுக்கி வைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், மாநிலம் முழுவதும், அதிரடி வேட்டை துவங்கியுள்ளது.
பான், குட்கா பொருட்களை தடையை மீறி விற்றால், அவற்றை பறிமுதல் செய்வதோடு, பொருட்களின் அளவுக்கேற்ப, 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கலாம்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பான், குட்கா தடை அமலில் உள்ளது. இருப்பை காலி செய்ய அவகாசமும் முடிந்து விட்டதால், மாவட்டந்தோறும், கலெக்டர்கள் தலைமையிலான குழு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் பான், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள், மாவட்ட நியமன அலுவலர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. இதில், நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களும் தகவல் தரலாம்...! : தடையை மீறி பான், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதும், பதுக்கி வைத்திருப்பதும் குற்றம். இது பற்றி தகவல் தெரிந்தால், உணவு பாதுகாப்புத் துறை கமிஷனரின், புகார் மையத்தின், 94440 42322 என்ற, பிரத்யேக எண்ணில், அலுவலக நேரத்தில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். "தகவல் தருவோர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்; தடையை மீறி விற்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment