Jun 26, 2013

பான், குட்காவுக்கு அவகாசம் நீட்டிப்பில்லை : நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுரை

சென்னை: "பான், குட்கா பொருட்களை காலி செய்ய, மேலும் ஒரு வார அவகாசம் கேட்ட வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது' என, உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி விற்போர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும், புகையிலை பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிடங்குகளில் உள்ள, இருப்புகளை காலி செய்ய அளிக்கப்பட்ட, ஒரு மாத கால அவகாசமும், ஜூன், 22ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இதனால், மாநிலம் முழுவதும், அதிரடி நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை துவங்கியது. இதனிடையே, "இன்னும் ஒரு வாரம், அவகாசம் தர வேண்டும்' என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். சென்னையில், உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் குமார் ஜெயந்த் தலைமையில், மாவட்ட நியமன அலுவலர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், "இருப்புக்களை காலி செய்ய, ஒரு மாத அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் அவகாசம் அளிக்க முடியாது. தடையை மீறி பான், குட்கா பொருட்களை விற்றால், கலெக்டர் தலைமையிலான கண்காணிப்புக்குழு மூலம், நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, மாவட்ட நியமன அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கலெக்டர்கள் தலைமையில், ஆர்.டி.ஓ., - எஸ்.பி., வணிகவரித் துறை, பள்ளிக் கல்வித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சிகளின் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தை நடத்தி, பான், குட்கா பொருட்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என, தெரிகிறது. "தடையை மீறி விற்கப்படும் பான், குட்கா பொருட்களை, பறிமுதல் செய்வதோடு, 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்; தடையை மீறி விற்போர் பற்றி, 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்' என, உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment