Jun 22, 2013

உணவு பாதுகாப்பு துறையும் களத்தில் குதிப்பு : மாநிலம் முழுவதும் குடிநீர் மாதிரி சேகரிப்பு

மத்திய அரசின் பரிந்துரையை அடுத்து, குடிநீர் தர பரிசோதனைக்காக, தமிழகம் முழுவதும், குடிநீர் மாதிரி எடுக்கும் பிரத்யேக பணியில், உணவு பாதுகாப்புத் துறையும் களத்தில் குதித்துள்ளது.
சென்னையில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பும் குடிநீர், தரமில்லாதது தொடர்பான வழக்கு, பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. தீர்ப்பாய உத்தரவை அடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதியில்லாத நிறுவனங்களை மூடுதல், மாதிரி எடுத்து பரிசோதித்தல் என, பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள, குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் குடிநீர் மாதிரிகளை எடுத்து வருகிறது. இவை பரிசோதிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என, தெரிகிறது.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையும், திடீரென களத்தில் குதித்துள்ளது.
"மாவட்டங்கள் தோறும், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்' என, மத்திய உணவு பாதுகாப்புத் துறை, மாநிலங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன்படி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் மாதிரிகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரைப்படி, மாநிலம் முழுவதும், எல்லா மாவட்டங்களிலும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி இடம், வெளியேற்றும் பகுதி என, தலா இரண்டு மாதிரிகள் என, இதுவரை, 310 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில மாவட்டங்களிலும், மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாதிரிகள் எடுத்து முடித்து, பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment