Jun 24, 2013

பான், குட்கா காலி செய்ய அவகாசம் முடிந்தது மீறி விற்றால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

தமிழகத்தில் பான், குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இருப்பை (ஸ்டாக்) காலி செய்ய, அரசு கொடுத்த, ஒரு மாத கால அவகாசம் முடிந்து விட்டது.
புகையிலையால் ஏற்படும், பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், தமிழகத்தில், குட்கா, பான் மசாலா போன்ற, வாயில் வைத்து சுவைக்கும், புகையிலைப் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், கிடங்குகளில் உள்ள, இருப்புகளை காலி செய்ய, ஒரு மாதம் அவகாசம் தரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு கொடுத்த ஒரு மாத கால அவகாசம், ஜூன் 22ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதன்படி, எந்த இடங்களிலும் பான், குட்கா பொருட்களை வைத்து இருந்தாலும், சட்டப்படி குற்றமாகிறது. இதனால், தமிழகம் முழுவதும், அதிரடி வேட்டை துவங்கும் என, தெரிகிறது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பான், குட்கா பொருட்களை தடையை மீறி விற்றால், அந்தப் பொருட்களை  பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கப்படும். பொருட்களின் அளவுக்கேற்ப, 5 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பான், குட்கா விற்பனை, பதுக்கலைக் கண்காணிக்க, கலெக்டர், உணவு பாதுகாப்புத் துறை, வணிக வரித் துறை, உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு, மாவட்ட அளவில், குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தக்குழு, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு, நடவடிக்கைகளை உடனடியாக துவங்கும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment