Jun 29, 2013

41 குடிநீர் நிறுவனங்களின் தர பரிசோதனை முடிந்தது: ஜூலை 2ல் அறிக்கை தாக்கல்

சென்னையில் செயல்படும், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர், பாதுகாப்பற்றதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்ததால், தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென் மண்டலம்) தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அனுமதியின்றி செயல்பட்ட, 92 குடிநீர் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதில், 85 நிறுவனங்களின் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதித்ததில், தர பரிசோதனையில் தேறிய, 51 நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின்படி, மீதமுள்ள, 41 நிறுவனங்களில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீண்டும் குடிநீர் மாதிரிகளை எடுத்து, தர பரிசோதனைக்காக, உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வகத்தில், இரண்டு வாரமாக பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிக்கப்பட்டு, அது பற்றிய விவரங்களை, உணவு பாதுகாப்புத் துறை, முறைப்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நேற்று அனுப்பப்பட்டது. இதில், எத்தனை நிறுவனங்களின் குடிநீர் தரமாக இருந்தது. எத்தனை நிறுவனங்களின் குடிநீர் தரமில்லாமல் இருந்தது என்ற விவரம், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "41 நிறுவனங்களில், இரண்டாம் முறை எடுத்த குடிநீர் மாதிரி பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது. இதை ஒருங்கிணைத்து, அறிக்கை தயாரித்து வருகிறோம். அந்த அறிக்கை, ஜூலை, 2ம் தேதி, பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்' என்றார்.
இரண்டு மாதத்திற்கு மேலாக முடங்கியுள்ள, 41 குடிநீர் நிறுவனங்களும் மீண்டும் செயல்படுமா என்பது, ஜூலை, 2ம் தேதி தெரிய வரும்.

No comments:

Post a Comment