Apr 16, 2013

எட்டயபுரம் பஸ் நிலையத்தில் உள்ள குளிர்பான கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்

மாவட்டம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை
எட்டயபுரம் பஸ் நிலையத்தில் உள்ள குளிர்பான கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எட்டயபுரம், ஏப். 16:தூத்துக்குடி
மாவட்டத்தில் மினரல் வாட்டர், குளிர்பானங்கள் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கி விட்டதால் தெருக் களில் உள்ள சாதாரண பெட்டி கடைகள் முதல் நகரங்களில் உள்ள குளிர்பான கடைகள், பழக்கடை என எல்லா பகுதியிலும் மினரல் வாட்டர், குளிர்பானங்கள், பழச்சாறு விற்பனை ஜோராக நடக்கிறது.
சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளம்பரங்களில் தாகம் தணிப்பதை பார்த்து நொங்கு, பதனீர், மோர், நீச்சத்தண்ணீர், இளநீர் குடித்து தாகம் தணித்த கிராமத்து இளைஞர்கள் கூட இன்று பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை பருகுவதையே நாகரிகமாக கருதுவதால் குளிர்பானம், குடிநீர் பாட்டில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
இதனால், அதிக லாபம் பெறும் நோக்கோடு ஒரு சிலர் அங்கீகாரம் பெறாமல் தரமில்லாத குடிநீர் மற்றும் லேபிள் ஒட்டாத குளிர்பானங்களை தயார் செய்து விற்கின்றனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதியிலும், பஸ் நிலையம், ரயில் நிலையம், மதுபான பார்கள், சாலையோர கடைகள் போன்றவற்றில் காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்கின்றனர்.
எனவே இதுபோன்ற விற்பனையை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதாவது:
பெரும்பாலும் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் குளிர்பான பாட்டிலில் காலாவதி நாளை கவனிப்பதில்லை. தாகம் தணிந்தால் போதும் என்ற எண்ணத்தில் குடிநீர் பாக்கெட், பாட்டில்களில் தரச்சான்றிதழ் உள்ளதா என்றும் பார்ப்பதில்லை.
இதை பயன்படுத்தி, தரமில்லாத, காலாவதியான குளிர்பானங்களை மிக எளிதாக விற்பனை செய்து விடுகின்றனர். எனவே, பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது விழிப்புடன் இருக்க வேண் டும். காலாவதியான தரமில்லாத குடிநீர், குளிர்பானங்களை பருகுவதால் வயிறு சம்பந்தமான நோய்கள் உருவாகும்.
எனவே, இவற்றை அடியோடு ஒழிக்கும் பொருட்டு கலெக்டர் உத்தரவின் பேரில் எனது தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோவில்பட்டி மாரிச்சாமி, கயத்தார் பொன்ராஜ், ஓட்டப்பிடாரம் நீதிமோகன் பால்ராஜ், புதூர் சிவபாலன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment