Dec 29, 2012

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை

தர்மபுரி: தர்மபுரி நகரப்பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் சாலையோரங்களில் இருப்பதால், சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தர்மபுரி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பஞ்சாயத்து பகுதியில், 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. ஆடுகளை சுகாதாரமான முறையில் அறுக்க வசதியாக தர்மபுரி நகராட்சி சார்பில் சந்தைபேட்டையில் ஆடு வெட்டும் இடங்களில் வெட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் கடைகளில் ஆடுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான கடைகள் சாலையோரங்களிலும், புழுதி பறக்கும் மண் சாலையோரங்களிலும் உள்ளன.
கடைகளில் ஆடுகள் வெட்டி தொங்க விடும் போது, சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் தூசிகள் அனைத்தும் இறைச்சிகளில் படியும் அவலம் உள்ளது.நகரப்பகுதி மற்றும் பஞ்சாயத்து பகுதியிலும் இதே நிலையுள்ளது. நெருக்கடியான சூழ்நிலை இறைச்சி கடைகளில் உள்ள கூட்டம் காரணங்களால் இறைச்சி வாங்குவோர் சுகதாதாரத்தை பற்றி கவலைப்படாமல் வாங்கி செல்கின்றனர். அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்வதில்லை.அப்படியே சுகாதார துறை மற்றும் உணவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் போது, இறைச்சி கடைக்காரர்கள் கொடுக்கும் "மாமூல்' தொகையை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.
வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தை பற்றி கவலைப்படாமல், நகரில் உள்ள பல இறைச்சி கடைக்காரர்கள் விற்பனை நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்இது குறித்து சுகாதார துறையினர் உரிய ஆய்வு செய்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 comment: