Oct 28, 2012

டீத்தூளில் துணிக்கு போடும் சாயம் "மிக்சிங்'

சேலம்: "டீத்தூளில், முந்திரி தோல், இளவம்பஞ்சு காய், துணிகளுக்கு போடும் சாயம் போன்றவை கலக்கப்படுகிறது. செந்நிறமாக இருக்கும் டீயால், குடல்நோய், கல்லீரல், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும். கலப்பட டீத்தூள் பயன்படுத்துவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்' என, கலெக்டர் மகரபூஷணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஏழை, எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை, பருகுவது டீ ஒன்று தான். அந்த டீத்தூளில், பல்வேறு கலப்படங்களை செய்து, மக்களின் உடல் நலத்தை கெடுக்கின்றனர். குறிப்பாக, முந்திரிதோல், துணிகளுக்கு போடும் சாயம், இளவம்பஞ்சுகாய் உள்ளிட்டவை கலக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, டீத்தூளில் எந்தவிதமான சாயங்களும் சேர்க்கக்கூடாது. செயற்கை வண்ணங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது.

நல்ல தரமான டீத்தூளில், 200 கப் டீ மட்டுமே கிடைக்கும், கலப்பட டீத்தூளில், 400 கப் டீ கிடைக்கும். இந்த டீயை சாப்பிடுவதால், குடல், கல்லீரல் உள்ளிட்டவை பாதிக்கப்படும். புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்புள்ளது. கலப்பட டீ விற்பவர்களுக்கு, உணவு பாதுகாப்பு சட்டப்படி, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.டீத்தூளில் கலப்படம் உள்ளதா என்பதை எளிய முறையில் கண்டறியலாம். அதாவது, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி டம்ளரில் உள்ள நீரில் டீத்தூளை தூவவும். டீத்தூள் நீரில் இறங்கும்போது, நீர் சிகப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறினால், அது கலப்படத்தூள். சுத்தமான டீத்தூள் குளிர்ந்த நீரில் சாயம் வராது. கொதித்த நீரில் மட்டுமே சாயம் வரும்.மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, காரவகைகள் விற்பனை செய்வோர், கலப்படம் இல்லாத வகையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையில் கட்டாயம் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள், லைசென்ஸ் பெற்றுள்ள கடைகளில் மட்டுமே, இனிப்பு, காரவகைகளை வாங்குங்கள். புகார்கள் இருக்கும்பட்சத்தில், தொலைபேசி: 0427 - 2450332, மொபைல்: 94435 20332 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment