Oct 26, 2012

சாலையோர டிபன் கடைக்கு "லைசென்ஸ்' கட்டாயம்:கலெக்டர் மகரபூஷணம் அறிவிப்பு

சேலம்: "சாலையோர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், காய்கறி, பழம் விற்பவர்கள், தலைச்சுமையாக வியாபாரம் செய்பவர்கள் உள்பட பல்வேறு உணவுப் பொருள் விற்பனையாளர்கள், தங்களுடைய பெயர் பதிவு மற்றும் லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என, சேலம் கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ரேஷன் கடை, ஆவின், டாஸ்மாக் கடை, பார், சிவில் சப்ளைஸ் குடோன்கள், கூட்டுறவு மற்றும் பொன்னி பண்டக சாலை, அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குமிடம், ஆதிதிராவிடர், பிற்பட்டோர் நல விடுதிகள் ஆகியவை பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயம். சேலம் மாவட்டத்தில், அரசு உணவு நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் பெற்று விட்டன.

அனைத்து உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், அரிசி ஆலைகள், சேகோ ஆலைகள், உணவு எண்ணெய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள், மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடைகாரர்கள், இனிப்பு, காரவகைகள் தயாரிப்பவர், விற்பனை செய்பவர், சாலையோர உணவு கடைக்காரர்கள், பேக்கரி, இறைச்சி வியாபாரிகள், சில்லி சிக்கன் கடைகள், காய்கறி, பழம் விற்பனை செய்வோர், பால் உற்பத்தியாளர்கள், பால் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் கேன்டீன் நடத்துபவர்கள், திருமண மண்டபங்களில் உணவு தயாரிப்போர், மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், தலைச்சுமையாக தெருவில் விற்பவர்கள், சாலையோர தள்ளுவண்டி கடைக்காரர்கள், அனைத்து உணவுப் பொருள் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களை பதிவு செய்வது, உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு மற்றும் உரிமம் பெறாமல் வியாபாரம் செய்வது குற்றமாகும். இந்த குற்றத்துக்கு, ஆறு மாத சிறைத்தண்டனை, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.மொத்தம், 12 லட்சம் ரூபாய்க்கு, குறைவாக வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவரிடம், "படிவம் ஏ'யை பூர்த்தி செய்து, வங்கியில், 100 ரூபாய் செலுத்தி, பதிவு சான்று பெற வேண்டும். 12 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்வோர், மாவட்ட நியமன அதிகாரியிடம், "படிவம் பி'யை பூர்த்தி செய்து, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, செலுத்தி உரிமம் பெற வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து, 60 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.உரிமத்தின் காலம், பெறப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு செல்லத்தக்கதாகும்.

உணவுப்பொருள் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தொற்று நோயுள்ள பணியாளர்களை, நிறுவனங்களில் பணியமர்த்தக்கூடாது. விற்பனை நிலையத்தில், எலி மற்றும் பூச்சிகள், நோய் பரப்பும் கிருமிகள் இருக்கக்கூடாது. பயன்படுத்திய உணவு எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.உணவு பொருள் விற்பனை செய்ய உரிமம் பெற்ற வணிகர்கள், தங்களின் உரிமத்தை புதுப்பிக்கவும், உரிமத்தை மாற்றியமைக்கவும், அடுத்த ஆண்டு ஃபிப்.,4ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, உணவு உரிமம் பெறாதவர்கள், உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் வணிகர்கள் டிசம்பர், 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை, நாட்டாண்மை கழக கட்டிடம், சேலம், டெலிபோன்; 0427 - 2450332, மொபைல்: 94435 - 20332 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

No comments:

Post a Comment